கோவையில் கனிம வளங்கள் கடத்தலா:  94870 06571க்கு தகவல் தெரிவிக்கலாம்

கோவை:
கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மண் எடுத்தாலோ அல்லது செங்கல் சூளைகள் நடத்தினாலோ, அதைப்பற்றிய தகவல் தெரிவிக்க, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், வனப்பகுதியை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீரோடைகள், மலைக்குன்றுகள் மற்றும் பட்டா நிலங்களில், அனுமதியின்றி கிராவல் மண், செம்மண் வெட்டி எடுத்து கடத்தப்பட்டன.

சட்ட விரோதமாக, செங்கல் சூளைகள் செயல்பட்டன. ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகள் குழு கள ஆய்வு செய்து உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அக்குழு, கோவையில் முகாமிட்டு விசாரித்து வருகிறது.

இதேபோல், தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில், ஐந்து கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட இடங்களில், அனுமதியின்றி செம்மண் அள்ளப்பட்டு, செங்கல் சூளைகள் நடத்தப்பட்டது தொடர்பாகவும், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழு அலுவலகம், கோவை உப்பிலிபாளையத்தில் பழைய பாஸ்போர்ட் அலுவலகம் பின்புறத்தில் செயல்படுகிறது.

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பது மற்றும் செங்கல் சூளைகளை நடத்தி வருபவர்கள் பற்றிய தகவல்களை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் அல்லது, 94870 06571 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என, சட்ட விரோத மண் அகழ்வு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement