மங்களம்மா


மைசூரு மாவட்டம,சாமுண்டி மலைப்பகுதியை சேர்ந்தவர்,தற்போது 100 வயதாகிறது இந்த வயதிலும் எழுதுவதிலும் வாசிப்பதிலும் இவர் காட்டும் ஆர்வத்தைச் சொல்வதே இந்த கட்டுரை.

அந்தக் காலத்தில் பெண்கள் உயர்கல்வி பயில்வதில் பல சிக்கல்கள் இருந்தன அதில் ஒரு சிக்கல் சிறு வயது திருமணம்.

இந்த சிக்கல் இவருக்கும் ஏற்பட்டது,14 வயதில் திருமணம் ஆனால் கணவராக வந்த சீதாராமையா மணைவியின் கல்வி வேட்கையை புரிந்து கொண்டு பிடித்ததை படி என்று ஊக்கப்படுத்தினார்.
Latest Tamil News
இதன் காரணமாக கன்னடம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு,இந்தி மற்றும் ஆங்கில மொழிகளையும் படித்தவர் அந்தந்த மொழியில் உள்ள இலக்கியங்களை தேடித்தேடி படிக்கலானார்.இவர் படித்த புத்தகங்களால் வீடு நிறைந்து வழிய வீட்டினுள் ஒரு நுாலகத்தையே ஏற்படுத்தினார்.

வாசிப்பது என்பது வேலைக்காக மட்டுமல்ல அறிவை பெருக்கவும் என்பதை உணர்ந்து அதை மற்றவர்களுக்கு உணர்த்தினார்.இந்தி கற்றுக் கொள்வதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதை சொல்லி அதற்காக பலருக்கும் இந்தியை இலவசமாக கற்றுக் கொடுத்தார்,இதை ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தார்.கைவினைப்பொருள் செய்யக்கற்றுக் கொண்டால் குடும்ப பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயமாக சம்பாதிக்கலாம் என்பதற்காக இவர் முதலில் பல்வேறு கைவினைப் பொருட்கள் தயார் செய்வதைக் கற்றுக்கொண்டு பின் அதனை ஏழை எளிய பெண்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது அதில் தன்னை இணைத்துக் கொண்டு அந்தப்பகுதியில் நடைபெற்ற போராட்டங்களில் பங்குகொண்டு சிறைக்கு சென்றார்.

இவரது சுதந்திர போராட்ட உணர்வு மற்றும் சமூக சேவையை பாராட்டும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆன்மீகத்தில் அதிகம் ஈர்க்கப்பட்டு அது தொடர்பான சமயப்பணிகளில் பிரசங்கத்திலும் ஈடுபட்டார்.கன்னட மொழியில் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் தொடர்பாக இதுவரை 18 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

அன்றாடம் காலை 4:30 மணிக்கு எழுந்து கொள்ளும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கிறார் இயங்குகிறார் நிறைய வாசிக்கிறார் வாசித்ததில் நேசிக்கும் விஷயங்களை தொகுத்து அதை எளிமையாக்கி புத்தகமாக எழுதுகிறார்.

100 வயதான நிலையில் அவரை பலரும் பார்த்து பாராட்டிய போது வயது என்பது ஒரு எண் மட்டுமே ,மனதையும் உடலையும் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் வாழ்க்கையில்,உணவில் எளிமையையும்,பழகும் மக்களிடம் இனிமையையும் கடைப்பிடித்தால் ஆயுள்உள்ளவரை ஆரோக்கியமாக இருக்கலாம் என்கிறார்.

-எல்.முருகராஜ்

Advertisement