கம்பத்தில் ஆக்கிரமிப்புகளால் சுருங்கும் தெருக்களால் சிரமம் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

கம்பம் : கம்பம் நகரில் பல தெருக்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகலாகி வருவதால் தெருவில் நடக்க கூட முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ளனர். நகரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்து, பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மெயின்ரோடு, வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி, பார்க் ரோடு, கம்பமெட்டு ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.

இது தவிர தியாகி வெங்கடாச்சலம் தெரு, குட்டியா பிள்ளை தெரு, கொண்டி தொழு தெரு, கிராம சாவடி வீதி, காளவாசல் வீதிகள், பாரதியார் நகர், ஓடைக்கரை தெரு, நாட்டுக்கல் தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட் தெரு, மாரியம்மன் கோயில் கிழக்கு வீதி என பெரும்பாலான தெருக்களில் நடக்க கூட முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து தெருக்கள் குறுகலாகி வருகின்றன. அகலமான விவேகானந்தர் தெரு தற்போது மிக குறுகலாக மாறி உள்ளது.

இதற்கு காரணம் பலர் வீட்டு வாசல் படிகளை ரோட்டில் கட்டுவதும், சன்சைடுகளை ரோடு வரை இழுத்து கட்டுவதும், கார் மற்றும் டூவீலர் பார்க்கிங் வீதியை ஆக்கிரமித்தும் கட்டி உள்ளனர். இத்தனை ஆக்கிரமிப்புகளையும் நகராட்சியின் நகரமைப்பு துறை வேடிக்கை பார்த்து வருகிறது.

வர்த்தக மண்டலம், குடியிருப்பு மண்டலம் என பிரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகரமைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement