தொடர் தோல்வி எதிரொலி:இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் பதவி விலகல்

புதுடில்லி: கால்பந்து தொடர்களில் தொடர் தோல்வி எதிரொலியால், இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் 56, இன்று பதவி விலகினார்.

ஸ்பெயினை சேர்ந்த மனோலோ மார்க்வெஸ் கால்பந்து பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர் ஆவார். அவர் தற்போது இந்திய தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

அவர், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பால் இந்திய தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையின் கீழ், இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 1 வெற்றி, 4 போட்டிகளில் சமநிலை மற்றும் 1 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் மனோலோ மார்க்வஸ், கால்பந்து தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது குறித்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு துணை பொதுச்செயலாளர் சத்திய நாராயணா கூறியதாவது:


இன்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கால்பந்து அணியின் தோல்விகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் மீது புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து அவர், தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். அவரது பதவிக்காலம் இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அவ்வாறு இருந்த போதிலும் அவர் பதவி விலகுவதாக கேட்டுக்கொண்டார்.


இந்நிலையில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அவரை விடுவிக்க ஒப்புக்கொண்டது. கால்பந்து கூட்டமைப்பு மற்றும் மனோலோ மார்க்வெஸ் இரு தரப்பினருக்கும் எந்த நிதி தாக்கங்களும் இல்லாமல் பிரிந்து செல்ல முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர், இந்திய பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். விரைவில் தலைமை பயிற்சியாளர் பதவி நிரப்பப்படும்.
இவ்வாறு சத்திய நாராயணா கூறினார்.

Advertisement