கார் ரேஸ் நடத்திய சாலையில் பள்ளம்: தடுமாறி செல்லும் வாகனங்கள்

சென்னை: பார்முலா கார் ரேஸ் நடத்துவதற்கு போடப்பட்ட பள்ளங்களை முறையாக சீரமைக்காததால், அண்ணாசாலையில் வாகனங்கள் தள்ளாடியபடியே பயணிக்கின்றன.

தீவுத்திடலை சுற்றியுள்ள அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, காமராஜர் சாலை, கொடிமர சாலை ஆகியவற்றில், 2024 செப்டம்பரில், 'பார்முலா - 4' கார் பந்தயம் நடந்தது.

இதற்காக, சென்னை மாநகராட்சி வாயிலாக, 1.30 கோடி ரூபாய் மதிப்பில், 3.50 கி.மீ., துாரம் ஒருபகுதியில் சாலை அமைக்கப்பட்டது.

அண்ணா சாலையின் மறுபகுதியில், பார்வையாளர்கள், விருந்தினர்கள், போட்டியாளர்கள் அமருவதற்கான இருக்கைகள், தற்காலிக ஓய்வறைகள் அமைக்கப்பட்டன. ஆங்காங்கே மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன.

இதற்காக, அண்ணா சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

போட்டி முடிந்ததும் அவற்றை மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்தது. ஆனால், முறையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், தற்போது அண்ணா சாலையில் பல்லவன் சாலை சந்திப்பு முதல் மன்றோ சிலை வரை ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகியுள்ளன. இவற்றில் வாகனங்கள் தடுமாறிய படியே செல்கின்றன.

இரவு நேரங்களில் அங்கு வெளிச்சம் குறைவாக இருப்பதால், பள்ளங்களில் நிலை தடுமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. தீவுத்திடலுக்கு அருகே, ஆட்டோ பழுது பார்க்கும் கடைகள் உள்ளன.

அங்கு சாலையோரம் நிறுத்தப்படும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

பல மாதங்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்களையும், இருசக்கர வாகனங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement