வளர்ச்சி பணிகள்; கமிஷனர் ஆய்வு

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி சார்பில் கோவில்வழியில் நகரின் மூன்றாவது பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடக்கிறது. பெருமளவு பணிகள் முடிந்த நிலையில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. இறுதிக்கட்டப்பணிகள் நடந்து வருகிறது.

மாநகராட்சி கமிஷனர் அமித் நேற்று காலை அப்பகுதிக்கு சென்று முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்து, நடைபெற்று வரும் இறுதிக்கட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

மேலும், ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் நடராஜா தியேட்டர் ரோடு பகுதிகளில் உயர் மட்டப்பாலம் கட்டுமான பணிகளையும், கமிஷனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தெரு நாய்களை பிடித்துச் சென்று அறுவை சிகிச்சை செய்யும் பணியில் தங்கம் மெமோரியல் டிரஸ்ட் ஈடுபட்டுள்ளது. இவ்வமைப்பு சார்பில் கோவில் வழியில் நடத்தப்படும் மையத்தை ஆய்வு செய்த கமிஷனர் தெரு நாய்கள் கட்டுப்படுத்தும் பணிகள் நிலை குறித்து கேட்டறிந்தார்.

மக்கும் கழிவுகளை பயன்படுத்தி உரம் உற்பத்தி செய்யும் நுண்உர உற்பத்தி மையங்கள்; நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும் கமிஷனர் பார்வையிட்டார்.

தாராபுரம் ரோடு, முன் அரசு மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட்ட இடத்தில், மாநகராட்சிக்கு புதிய அலுவலக வளாகம் கட்டப்படவுள்ளது. அந்த இடத்தையும், மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்களுடன் கமிஷனர் பார்வையிட்டார்.

Advertisement