அமராவதி ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்

கரூர், கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் ஓடும் நிலையில், புதர்மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகளையும், குடிநீர் தேவையையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலை தொடருக்கும், ஆனைமலை தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு. திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது.

இந்நிலையில், கரூர், சுக்காலியூர் உள்பட பல ஆற்று பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றின் மையப்பகுதிகளில், கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. ஆறு தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. கருவேல மரங்களின் வேர்கள் பூமிக்கடியில் ஊடுருவி சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சி வளரும். மேலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை, உறிஞ்சி எடுத்து கொள்ளும் தன்மை உடையதாக உள்ளது.
தற்போது ஆற்றில் தண்ணீர் ஓடும் நிலையில், கருவேல மரங்களால் கடைமடை வரை தண்ணீர் செல்வது தடைபடுகிறது. உடனடியாக பொக்லைன் உதவியுடன் ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement