சென்னையில் இயக்கிய 9 விமான சேவைகள் திடீரென நிறுத்தியது 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்'

சென்னை: சென்னையில் இருந்து உள்நாட்டு நகரங்களுக்கு இயக்கப்படும், ஒன்பது விமான சேவைகளை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.


சென்னையில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது.


கடந்த ஆறு மாதங்களில் ஜெயப்பூர், புவனேஷ்வர், கோவா, அந்தமான் உள்ளிட்டல, ஒன்பது நகரங்களுக்கு புது விமான சேவையை துவங்கியது.


பொதுவாக விமான நிறுவனங்கள் கோடை மற்றும் குளிர்கால அட்டவணைப்படி, 'ஸ்லாட்கள்' பெற்று விமானங்களை இயக்கும். இது தொடர்பான விபரங்கள் ஆணையம் சார்பில் வெளியிடப்படும்.


இந்நிலையில், புதிதாக துவங்கிய ஒன்பது நகருக்கான சேவைகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்நிறுவனம், முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தியுள்ளது.



இது, பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, பல்வேறு சேவைகள் பறிக்கப்பட்டு, சென்னை விமான நிலையம் பின்னுக்கு தள்ளப்பட்டு வரும் சூழலில், திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.



புதிய சேவையில் எதிர்பார்த்த அளவில் வருவாய் கிடைக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில்,'விமான இயக்கங்கள் வலையமைப்பை மேம்படுத்தும் வகையில், மறு சீரமைப்பு மேற்கொண்டு வருகிறோம். 'அதன் ஒரு பகுதியாக, ஒன்பது விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில், புதிய சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளோம்' என்றார்.

Advertisement