மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்: பாதுகாப்பு தர திருமாவளவன் வலியுறுத்தல்

4

சென்னை : '' போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும், '' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.


@1brசென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் அளித்த பேட்டி: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் படுகொலை வழக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான வழக்காகவும், தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் வழக்காக மாறி உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள், சாட்சிகளாக இருப்பவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது. நான் சென்ற போது கூட இந்த தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அஜித்குமார் குடும்பத்துக்கே அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு வேண்டும் என அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அவரின் குடும்பத்துக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா டாக்டர் அல்ல. பி.எச்டி முடித்தவர் என தெரிகிறது. அவர் குடும்பத்தினர் மீது பண மோசடி வழக்கு உள்ளதாக ஊடகங்களில் செய்திவருகிறது. அவரின் நடவடிக்கை குறித்து புகார் பெற்று உரிய விசாரணை நடத்த வேண்டிய நிலை உள்ளது. அவர் கோவிலுக்கு அந்த நகையை கொண்டு வந்தாரா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. ஆகவே, அந்த பின்னணியை கண்டறிய வேண்டியது இந்த வழக்குக்கும் அவசியமானதாக தெரிகிறது. அவருக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை நீதிமன்றத்தில் அரசு மறுத்துள்ளது. நிகிதாவை சுற்றி, இதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தனி வழக்காக பதிவு செய்து அவரிடம் விசாரிக்க வேண்டும்.



அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மேற்கொள்ளும் தமிழகம் காப்போம் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். கல்விக்கான நிதியை தரக் கோரி , பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் முறையிட்டார். இதன் பிறகும் நிதியை தர தயாராக இல்லை என்பது அவர்களின் தமிழகத்தின் மீதான கரிசனத்தை தெரிந்து கொள்ளலாம். தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு கொண்டு, தி.மு.க.,வுக்கு எதிராக செய்வதை போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழக மாணவர்களுக்கு தர வேண்டிய நிதியை தராமல் முடக்குவது தமிழகத்துக்கு எதிரானது. அது திமுக.,வுக்கு எதிரானது அல்ல. அரசுக்கு எதிரானது அல்ல. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement