பன்றி பண்ணையால் சீர்கேடு அழிஞ்சிவாக்க மக்கள் போராட்டம்

சோழவரம்:குடியிருப்புகளுக்கு அருகே செயல்படும் பன்றி பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பண்ணையை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.நகர், மல்லைய்யா நகரில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகளுக்கு அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில், தனியார் பன்றி வளர்ப்பு பண்ணை செயல்படுகிறது.

பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், குடிநீரில் கலப்பதால், குடியிருப்பு மக்கள் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பண்ணையை அகற்றக்கோரி, மூன்று ஆண்டுகளாக குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் நேற்று, உழைப்போர் உரிமை இயக்கம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர். பன்றி பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அவர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி சப்-கலெக்டர் முன்னிலையில் பேச்சு நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement