பூண்டி நீர்த்தேக்கத்தில் பூங்கா பணி நிறைவு

திருவள்ளூர்:பூண்டி நீர்தேக்க கரையை ஒட்டி, 5 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுச்சூழல் பூங்கா பணி நிறைவடைந்து, விரைவில் திறப்பு விழா காண உள்ளது.

சென்னை மாநகர மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்காக திருவள்ளூர் மாவட்டம், பூண்டியில் கடந்த, 1944ம் ஆண்டு நீர்தேக்கம் கட்டப்பட்டது. பூண்டி, சென்றாயன்பாளையம், மேட்டுப்பாளையம், பாண்டூர், பட்டரைபெரும்புதுார் என, 121 ச.கி.மீ., துாரம் பரந்து, விரிந்து காணப்படுகிறது.

நீர்தேக்கத்தின் கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., ஆகும். நீர்தேக்கத்தின் நடுவில், உபரி நீர் வெளியேற, 16 மதகுகள் உள்ளன. பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர் சேகரிக்கப்பட்டு, சென்னை நகர குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், பூண்டி நீர்தேக்கமும் ஒன்று.

விடுமுறை நாட்கள் மற்றும் காணும் பொங்கல் தினத்தன்று, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, பொதுமக்கள், குழந்தைகளுடன் நீர்க்தேக்கத்திற்கு வந்து, பார்வையிட்டு, இளைப்பாறி சென்று வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, சதுரங்கப்பேட்டை அருகில், நீர்தேக்கத்தை ஒட்டி, 29 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி துவங்கியது.

மாவட்ட நிர்வாகம் வாயிலாக, 3 கோடி ரூபாய் மற்றும் தனியார் நிறுவனங்களில் சமூக பங்களிப்பு நிதி, 2 கோடி என மொத்தம், 5 கோடியில் சுற்றுலாவாசிகளுக்கான உணவகம், குழந்தைகள் விளையாடும் பகுதி, சைக்கிள் நடைபாதை உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணி நடந்தது.

தற்போது பூங்கா பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் சுற்றுச்சூழல் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

Advertisement