நீரஜ் சோப்ராவின் 'கிளாசிக் ஈட்டி எறிதல்' போட்டி

பெங்களூரில் நடக்கும் நீரஜ் சோப்ரா கிளாசிக்கல் ஈட்டி எறிதல் போட்டியை காண, 10,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2020 ஒலிம்பிக்கில் தங்கமும்; 2024 ஒலிம்பிக்கில், வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜே.எஸ்.டபிள்யூ., மற்றும் நீரஜ் சோப்ரா இணைந்து, மே 24ம் தேதி, 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. நாளை, பெங்களூரில் உள்ள கன்டீரவா விளையாட்டு மைதானத்தில், இப்போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2016 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜெர்மனியின் தாமஸ் ரோஹலர், 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரும், 2015 உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான கென்யாவின் ஜூலியஸ் யெகோ; 2024 ஒலிம்பிக் வெண்கலம் வென்றவரும், இரண்டு முறை உலக சாம்பியனுமான ஆண்டர்சன் பீட்டர், அமெரிக்காவின் தாம்சன்; பிரேசிலின் லுாயிஸ் மவுரியா, இலங்கையின் பதிரகே, போலந்தின் சிப்ரியன் மிர்சிகிளோட், இந்தியாவின் யாஷ்விர் சிங், சச்சின் யாதவ், ரோஹித் யாதவ், சஹில் சில்வால் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

பாகிஸ்தானின் அர்ஷத் நதீமுக்கு அனுப்பிய அழைப்பை ஏற்க மறுத்து விட்டார்.

இதற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் துவங்கியது. இம்மைதானத்தில் மொத்த இருக்கைகள் எண்ணிக்கை, 18,000. இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

சின்னசாமி கிரிக்கெட் மைதான அசம்பாவிதம் நடக்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.


ஈட்டி எறிதல் போட்டி நடக்க உள்ளதால், ஜூலை 6ம் தேதி வரை இங்குள்ள 400 மீட்டர் ஓட்டப்பாதையில், தடகள வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது

- நமது நிருபர் -.

Advertisement