'கூரியர் பாய்' போல் நுழைந்து அடுக்குமாடி குடியிருப்பில் பெண் பலாத்காரம்

புனே: மஹாராஷ்டிராவில், 'கூரியர் பாய்' போர்வையில் வீட்டில் நுழைந்து மயக்க மருந்து தெளித்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மஹாராஷ்டிராவின் புனேவில் கோந்துவா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 22 வயது இளம்பெண் தன் சகோதரருடன் வசித்து வருகிறார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் அவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார்.

இரவு 7:30 மணிக்கு, 'கூரியர்' நிறுவனத்தில் இருந்து வருவதாக கூறி வந்த ஒருவர் வீட்டு கதவை தட்டியுள்ளார்.

வங்கி ஒன்றில் இருந்து ஆவணம் வந்துள்ளதாகவும், கையெழுத்திட பேனா இல்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

பேனா எடுக்க வீட்டில் நுழைந்த பெண்ணை பின்தொடர்ந்த அந்த நபர், அவர் மீது மயக்க மருந்தை தெளித்தார்.

மயங்கி சரிந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு, பின் அங்கிருந்து தப்பினார். ஒரு மணி நேரத்துக்கு பின் கண்விழித்த பெண், தன் அலங்கோல நிலை கண்டு அதிர்ந்தார்.

தன் மொபைல் போனை பார்த்த போது, பலாத்காரத்துக்கு பின் முகத்தை பாதி மறைத்த நிலையில் அந்த நபர் 'செல்பி' எடுத்திருந்ததை கண்டு உறைந்தார். அதனுடன், குறிப்பு ஒன்றையும் தப்பிய நபர் விட்டுச் சென்றிருந்தார்.

'பலாத்காரம் செய்த பின் எடுத்த புகைப்படங்கள் என்னிடம் உள்ளன.

இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். அது மட்டுமல்ல, நான் மீண்டும் வருவேன்' என, அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசில் இளம்பெண் புகாரளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், 10 தனிப்படைகள் அமைத்து தப்பிய நபரை தேடி வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை வைத்தும், சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்களை கொண்டும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement