மதுரை, சிவகாசியில் நாளை தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நாளை மறுநாள் திண்டுக்கல், தேனியில்...

மதுரை; பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் 'தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி -2025' நிகழ்ச்சி, மதுரையில் நாளை (ஜூலை 5) மதியம் நடக்கிறது. அதேநாளில் சிவகாசியில் காலையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மதுரையில் நாளை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் மதியம் 3:00 - 6:00 மணிக்கும், சிவகாசியில் எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் காலை 10:00- 1:00 மணிக்கும், நாளை மறுநாள் (ஜூலை 6) திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., ஹாலில் மதியம் 3:00 - 6:00 மணிக்கும், தேனியில் பாரஸ்ட் ரோட்டில் உள்ள அன்னப்பராஜா மஹாலில் காலை 10:00 - 1:00 மணிக்கும் இந்நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆண்டுதோறும் மாணவர்கள் நலன் கருதி பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை தினமலர் நடத்துகிறது. இதில் அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதனால் கலந்தாய்வு குறித்து தெளிவும், எவ்வாறு விண்ணப்பித்து பங்கேற்க வேண்டும் என்ற புரிதலும் மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் பயனடைகின்றனர்.

இதுதவிர இந்நிகழ்ச்சியில், இந்தாண்டு மாணவர்கள் பெற்றுள்ள 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும், ஆன்லைன் கவுன்சிலிங்கில் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் என்ன, சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி, கவுன்சிலிங்கில் புதிய மாற்றங்கள் என்ன, சரியான சாய்ஸ் பில்லிங் உட்பட தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் அதிகாரிகள், நிபுணர்கள் நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர்.

இத்துடன் 'வாய்ப்பு மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள்' என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின் நான்கு இடங்களிலும் பேசுகிறார். 'ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த தகவல்கள்' என்ற தலைப்பில் திருச்சி அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் காளிதாஸ், சிவகாசியிலும் மதுரையிலும் பேசுகிறார்.

இந்நிகழ்ச்சியை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜி., ஆகியன இணைந்து வழங்குகின்றன.

Advertisement