உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது; அதிபர் டிரம்பிடம் புடின் திட்டவட்டம்

3


வாஷிங்டன்: உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைபேசியில் பேசியபோது அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


கடந்த, 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. மூன்று ஆண்டுகளை கடந்தும், இந்தப் போர் தொடர்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்.


இந்நிலையில், உக்ரைன் மோதல் குறித்து தொலைபேசியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, ரஷ்ய அதிபர் புடினுடன் அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரிலிருந்து ரஷ்யா பின்வாங்காது என ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இது குறித்து, ரஷ்ய வெளியுறவுத் துறை ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறியதாவது: ஈரானைச் சுற்றியுள்ள நிலைமை குறித்து, புடின் விவாதம் நடத்தினார். ஈரான் பிரச்னைகளை ராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்க்க வேண்டும். உக்ரைனில் ஏற்பட்ட மோதல் குறித்து, சண்டையை விரைவாக நிறுத்துவதற்கான தனது முயற்சியை டிரம்ப் வலியுறுத்தினார்.


உக்ரைனில் தனது இலக்குகளை அடையவும், மோதலுக்கான மூல காரணங்களை அகற்றவும் ரஷ்யா பாடுபடும். போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். டிரம்ப்-புடின் அழைப்பில் உக்ரைனுக்கு சில அமெரிக்க ஆயுத ஏற்றுமதிகளை நிறுத்துவது குறித்து விவாதிக்கப் படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement