சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44.61 அடியாக உயர்த்த வலியுறுத்தல்

கோவை; சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை, 44.61 அடியாக உயர்த்த, தி.மு.க., அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை:

கோவையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணையை, கேரள அரசு பராமரிக்கிறது. அணையின் நீர்த்தேக்க அளவு 49.53 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது.

தற்போது, நீர்மட்டம் 44 அடியை நெருங்கும் முன்பே, கேரள நீர்வளத்துறையினர் நீரை வெளியேற்றியுள்ளனர்.

சிறுவாணி அணையின் பராமரிப்புக்கு கேரள அரசு கேட்ட ரூ.5 கோடியை, தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது. கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விஷயத்தில் கூட, தி.மு.க., அலட்சியமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கேரள அரசுடன் பேசி, சிறுவாணி அணையில், இப்போதைக்கு 44.61 அடி வரையாவது நீரை தேக்க, போர்க்கால அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement