கொள்ளையில் தொடர்பா? கமிஷனரிடம் பா.ஜ., புகார்!

மதுரை; 'மதுரையில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமி வீட்டில், பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தங்கள் கட்சி வக்கீல்களை தொடர்புப்படுத்தி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஸ்ரீனிவாசன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் அய்யப்பராஜா புகார் அளித்தனர்.

அதில், அவர்கள் கூறியதாவது:

முன்னாள் அமைச்சரின் பல கோடி ரூபாய் கொள்ளை போனது குறித்து புகார் செய்யப்படாத நிலையில், இவ்விவகாரத்தில் இரு பா.ஜ., வக்கீல்களை தொடர்புபடுத்தியும், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு இதற்காக தான் நடந்ததாகவும் வதந்தி பரப்புகின்றனர். பா.ஜ., கட்சியையும், நிர்வாகிகளையும் தொடர்புபடுத்தி சில சேனல்கள் களங்கம் ஏற்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.

மதுரையில் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் வேகமும், வீச்சும் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement