ரூ.11,000 லஞ்சம் இருவர் சிக்கினர்

பேரையூர்; பேரையூரில், 11,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கருவூல அலுவலர் உட்பட, இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், பேரையூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் லதா, 60. சிலைமலைபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து, மே மாதம் ஓய்வு பெற்றார். ஓய்வூதியம் பெறுவதற்காக பேரையூர் சார்நிலை கருவூலத்தை அணுகினார். கருவூல அலுவலர் பழனிகுமார், 40, லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் லதா புகார் அளித்தார். நேற்று மதியம் அலுவலகத்தில், 11,000 ரூபாயை பழனிகுமாரிடம், லதா கொடுத்த போது, அதை உதவியாளர் லட்சுமி, 31, என்பவரிடம் கொடுக்குமாறு கூறினார்.

லதாவிடம் லட்சுமி பணத்தை பெற்றபோது, போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, பழனிகுமார், லட்சுமி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement