108 சக்தி பீடங்களை தரிசிக்க சைக்கிளில் 17,800 கி.மீ., பயணம் செய்த சன்னியாசி; உத்தரகோசமங்கையில் சுவாமி தரிசனம்

1

உத்தரகோசமங்கை; மகாராஷ்டிரா மாநிலம் சீரடியை சேர்ந்த சன்னியாசி ராதாகிருஷ்ணன் 60, சைக்கிளில் 108 சக்தி பீடங்களை தரிசனம் செய்வதற்காக இதுவரை 17,800 கி.மீ., பயணம் செய்துள்ளார்.

ராதாகிருஷ்ணன் நேற்று காலை 11:00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சைக்கிள் யாத்திரையை தொடர்ந்தார். அவர் சைக்கிளில் இந்தியாவில் உள்ள 108 சக்தி பீடங்களையும் தரிசனம் செய்ய முடிவு செய்து 2023 ஜன., 23ல் மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் இருந்து தனது புனித யாத்திரையை துவக்கினார்.

ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சைக்கிளில் நாள் ஒன்றுக்கு 70 முதல் 75 கி.மீ., பயணிக்கிறேன். செல்லும் இடங்களில் உள்ள கோயில், ஆசிரமம், விடுதி உள்ளிட்டவைகளில் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் சைக்கிளில் பயணம் செய்கிறேன். 2023ல் துவங்கிய எனது யாத்திரை மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ், ஹரியானா, பஞ்சாப், டில்லி, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள், நேபாளம் வழியாக தமிழ்நாடு வந்தடைந்து நேற்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு உத்தரகோசமங்கை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்ல உள்ளேன்.

பின்னர் மைசூர், சீரடி, மத்திய பிரதேசத்தில் எனது புனித யாத்திரையை நிறைவு செய்கிறேன். சைக்கிளில் சென்று 108 சக்தி பீடங்களை தரிசனம் செய்வது உடலுக்கும், உள்ளத்திற்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியவாறு சைக்கிளில் செல்லத் துவங்கினார்.

Advertisement