ஆய்வுக்கூட்டத்தில் வாக்குவாதம்: பி.டி.ஓ., போலீசில் புகார்

தேவகோட்டை; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றிய மக்கள் நல பணியாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில் பி.டி.ஓ,வுக்கு எதிராக சிலர் பேசியதையடுத்து இரு தரப்பும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமி. தலைமையில் மக்கள் நல ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பி.டி.ஓ., வுக்கும் மக்கள் நல பணியாளர்களுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்த மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் சங்க தலைவர் பூமிநாதன் தலைமையில் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூமிநாதன் கூறியது: நேற்று நடந்த கூட்டத்தில் பி.டி.ஓ. பெண் பணியாளர்களை ஒருமையிலும், ஜாதி பெயரை சொல்லியும் அநாகரீகமாக நடந்து கொண்டார். இது பற்றி கேட்ட போது பவுடர் அடித்து மினுக்கி கொண்டு வருவதற்கு நான் ஆள் கிடையாது. மேலும் முதல்வரை ஒருமையில் பேசி உங்களுக்கு வேலை போட்டு கொடுத்து எங்க தாலியை ஏன் அறுக்கிறீர்கள் என அவமரியாதையாக பேசுகிறார் என்றார்.

பி.டி.ஓ. வேலுச்சாமி: அவர்கள் பணிகளை பற்றித்தான் பேசினேன். நுாறு நாள் வேலையில் காலை மாலை கணக்கெடுத்து தர வேண்டும். நேற்று 16 வேலையில் பிரச்னை ஆயிருச்சு . அப்டேட் ஆகவில்லை. இவர்கள் பணியிடத்திற்கு செல்வதில்லை. பணித்தள பொறுப்பாளர் சொல்வதை கேட்டு தான் இவர்கள் சொல்கிறார்கள்.

இன்று நடந்த கூட்டத்தில் அரசு கொடுத்த பணி செயல்முறைகள் பற்றி வாசிக்க சொன்னேன். பெண்கள் சில காரணங்கள் கூறினர்.

ஆண்களிடம் கேட்டபோது உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றனர். நான் வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. என்னை அடிக்க வருவது போல வந்தனர். என்னுடைய அலுவலக அலுவலர்கள் உடன் இருந்தனர். அப்படி எல்லாம் பேசவில்லை என்றார்.

இதற்கிடையில் மக்கள் நல பணியாளர்கள் சிலர் தன்னை தாக்க வந்ததாகவும் , அலுவலர்கள் தடுத்ததாகவும் தாக்க வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பி.டி.ஓ., போலீசில் புகார் செய்தார்.

மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் பி.டி.ஓ., வேலுச்சாமி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இரு புகார்களுக்கும் போலீசார் மனு ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுத்து உள்ளனர்.

Advertisement