அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி; 16 பேர் காயம்

சிகாகோ: அமெரிக்காவில், இரவு விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023ல் மட்டும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 105 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில், சிகாகோ மாகாணத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஆர்டிஸ் லவுஞ்ச் என்ற பிரபலமான இரவு விடுதியில், நேற்று முன்தினம் இரவு, ராப் இசை ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சி முடிந்து ஏராளமானோர் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, கூட்டத்தை நோக்கி மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இதில்  இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 21லிருந்து 32 வயதுக்குட்பட்டவர்கள் என சிகாகோ போலீஸ் தெரிவித்துள்ளது. காயமடைந்த 16 பேரில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியது யார், தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதே இடத்தில், 2022ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

Advertisement