செல்வப்பெருந்தகை நிகழ்ச்சியில் வெளியேறிய காங்., -- எம்.எல்.ஏ.,

துாத்துக்குடி: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நிகழ்ச்சியில் இருந்து, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., திடீரென வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


துாத்துக்குடி லோக்சபா தொகுதி காங்கிரஸ் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, துாத்துக்குடியில் நடந்தது. அதில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார்.


நிகழ்ச்சி துவங்கிய சிறிது நேரத்திலேயே, காங்கிரசை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ், திடீரென அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.


நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களில் அவரது படம் மற்றும் பெயர் இடம் பெறாததால் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கட்சியினரிடையே தகவல் பரவியது.


இது குறித்து, ஊர்வசி அமிர்தராஜிடம் கேட்டபோது, “சென்னையில், தன் தந்தையின் நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடப்பதால், விமானத்தை பிடிக்க மதுரைக்கு விரைந்து செல்ல வேண்டியிருந்தது.


“கட்சியின் மாநில தலைவரிடம், அது குறித்த தகவலை தெரிவித்த பிறகே, நிகழ்ச்சியில் இருந்து கிளம்பினேன். வேறு ஏதும் பிரச்னை இல்லை,” என்றார்.

Advertisement