காவல்துறை தடம் புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

7

கோவை: தமிழகத்தில் காவல் துறை தடம்புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது என்று ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் குற்றம் சாட்டி உள்ளார்.



கோவையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (ஜூலை 5) உழவர் தின பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் முன்னாள் ஐ.ஜி.,பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;


தற்போதுள்ள காலகட்டத்தில் போலீசின் அணுகுமுறை எனக்கு உறுத்தலை தருகிறது. கடந்த ஆட்சியில் அப்பா, மகன் (சாத்தான்குளம் சம்பவம்) என இருவரையும் கொன்றனர். இம்முறையும் (அஜித்குமார் மரணம்) அப்படி காலி செய்கின்றனர்.


இதை நிறுத்த வேண்டும் என்று சொன்னால் அதற்கான பதில் இல்லை. கடந்த முறையும், இப்பவும் பதவியில் உள்ள முதல்வர்கள் பயங்கரமாக பேசுகின்றனர். அவர்கள் இருவரின் வாயில் இருந்து இன்னொரு முறை இதுபோன்ற குற்றம், கொலை நடந்தால் நான் அந்த பதவியை விட்டு விலகுவேன் என்று சொல்லவில்லை.


எந்த ஊடகமும் முதல்வரை பதவியை விட்டு இறங்குங்கள் என்று கேட்கவில்லை. கஷ்டப்பட்டு பணத்தை கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி வராங்க. எனவே 2 பேரிடமும் வழிநடத்திச் செல்லும் திறமையே இல்லை.


காவல்துறை தடம்புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது. கடந்த 7, 8 ஆண்டுகளில் டிஜிபியாக இருந்தவர்களை நோஞ்சான் போலீஸ் என்று சொல்லுவார்கள். நான் சொல்ல மாட்டேன்.


எஸ்பி, டிஐஜி, ஐஜி, அடிஷனல் டிஜி என அனைவரும் பொம்மை மாதிரி கழுத்தில் ஒன்றை கட்டிக் கொண்டு 'யுனிபார்ம் எல்லாம் பார்க்கிறேன். ஷுக்கள். கலர் சாக்ஸ் பார்க்கிறேன் என உச்சக்கட்ட அட்டூழியம் செய்கின்றனர்.
வரும் போது பார்க்கிறேன், தலையில் தொப்பி இல்லை. ஒவ்வொரு டிஜிபியும் ஒவ்வொன்றயும் செய்து, கூத்தடித்துக் கொண்டு, இவர்கள் எல்லாம் வாழ்ந்தும் வாழாதாவர்களாக செத்த முண்டங்களாக இருக்கின்றனர்.


காவல்நிலையத்தில் என்ன நடந்தாலும் சரி, நீதிமன்றத்திற்கு தெரியாமல் நடக்கவே கூடாது. மிக பெரிய போலீஸ் அதிகாரி ஒருவர் எப்ஐஆர் போடும் முன்னரே விசாரணையை தொடங்கலாம், அதில் தப்பே இல்லை என்று சொல்கிறார். இது தவறு. இந்த தவறு தான் அங்கு (அஜித்குமார் மரண சம்பவம்) நடந்தது.


சிஎஸ்ஆர் என்பது கோர்ட்டுக்கு தெரியாமல் நடக்கும் விசாரணை. இதில் உங்களை கூட விசாரணைக்கு கூப்பிடலாம். இந்த சிஎஸ்ஆரை வைத்து கோடி, கோடியாக சம்பாதித்தவர்கள் தான் இன்றைக்கு பெரிய, பெரிய அதிகாரிகளாக உட்கார்ந்திருக்கின்றனர்.


செத்த பூனைகள் எல்லாம் டிஜிபியாகிவிட்டனர். போலீஸ் ஒரு நோஞ்சான் என்கிறேனே? இதற்கு மேல் வார்த்தையே இல்லை. தனிப்பட்ட நோக்கம் என்று எதுவும் எனக்கு கிடையாது.


ஆனால் இங்கு (அஜித்குமார் சம்பவம்) எப்ஐஆரே இல்லாமல், அடிக்கிறது, உதைக்கிறது, கோயிலுக்குள் அழைத்து அடிக்கிறது என்று எல்லாம் பண்ணுகிறார்கள்.


கோயிலுக்குள் ஒரு போலீஸ் அதிகாரி விசாரிக்க வந்தால் அவனை அடித்து விரட்ட வேண்டாமா? போலீசில் முறையான விசாரணை என்பது பூஜ்யமாக இருப்பதால் சிஎஸ்ஆர் என்ற சட்டத்தில் சொல்லப்படாதது, என்று போலீஸ் டிஜிபி எப்படி கொண்டு வரலாம்? அவர் சரியாக படிக்கலை அல்லது ஆங்கிலம் தெரியாமல் இருக்கலாம். நான் கூறும் அனைத்து விஷயங்களுக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.


வாழ்க்கையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்பதை பண்ணுவதே கிடையாது. நான் பென்ஷனாக ரூ.95000 வாங்குகிறேன். ஒரு மாத பென்ஷனை நான் தந்துவிடுகிறேன். யாராவது ஒரேயொரு அதிகாரி அதிகபட்ச தண்டனை தரக்கூடிய வழக்குகள் அதாவது தூக்கு அல்லது ஆயுள் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களின் குற்றப்பத்திரிகையில் கையெழுத்து போட்டதாக சொல்லச் சொல்லுங்கள்.


சட்டத்தில் இல்லாத இந்த சனியன் பிடித்த சிஎஸ்ஆரை ஒழித்தீர்கள் என்றால் எல்லாம் சரியாகும். கோர்ட்டுக்கு தெரியாமல் நீங்கள் எதை செய்தீர்களோ, அவை எல்லாம் சட்டத்துக்கு புறம்பானவையே.


அதிகாரிகள் எல்லாம் ரியல் எஸ்டேட்டில் இறங்கினார்கள். அவர்கள் யார், யாரை எல்லாம் மிரட்ட வேண்டுமோ, அதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் ஸ்பெஷல் பார்ட்டி. அதுதான் உண்மை.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement