ஆன்மிக ஒளியின் பிம்பம் தலாய் லாமா


நாளை (06/07/2025)தலாய் லாமாவின் பிறந்த நாள்,

அதற்கான கொண்டாட்டம் துவங்கிவிட்டது,அவரைப் பின்பற்றுபவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலாய் லாமா என்பது ஒரு தனி நபரின் பெயர் அல்ல; அது திபெத்திய புத்தமதத்தினுள் உள்ள ஜெலுக்பா அமைப்பின் தலைவருக்கு வழங்கப்படும் ஆன்மிக பட்டம். தற்போதைய தலாய் லாமாவின் இயற்பெயர் தென்சின் க்யாத்சோ, இவர்14வது தலாய் லாமாவாக தற்போது பொறுப்பில் இருக்கிறார்.
Latest Tamil News
1935 ஆம் ஆண்டு திபெத்தின் அம்டோ பகுதியில் பிறந்த இவர், இரண்டு வயதில் முன்னாள் தலாய் லாமாவின் மறுபிறவி என அடையாளம் காணப்பட்டார். அதன் பிறகு, புத்த மதத்தின் ஆழமான கல்வியும் ஆன்மிகத் தேர்ச்சிகளும் அவருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன.

1959 ல் திபெத்தில் சீன ஆட்சி எதிர்ப்பு கிளர்ச்சி நடந்தபோது, தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
ஹிமாசலப் பிரதேசத்தில் தரம்சாலா எனும் இடத்தில் திபெத்திய அரசை வலியுறுத்தும் தலைமையகம் அமைக்கப்பட்டு, திபெத்தியர்களின் ஆன்மிக, பண்பாட்டு தலைவராகவும், உலக அமைதி தூதராகவும் தலாய் லாமா திகழ்கிறார்.இவரது இந்தப் பணியை பாராட்டி 1989 ல் தலாய் லாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Latest Tamil News
மக்லியோட்கஞ்ச் பகுதியில் உள்ள சுக்லாக்ஷாங் கோவிலில், அவரது நீண்ட ஆயுளுக்காக சிறப்பு பிரார்த்தனை விழா நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து ஆன்மிகவாதிகள், திபெத்திய மக்கள் மற்றும் இந்திய தரப்பிலிருந்தும் பலர் இதில் பங்கேற்றனர்.பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திபெத்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் பாடல்கள் நடைபெற்றன.

தலாய் லாமா, மனித நேயம், அமைதி, சகிப்புத் தன்மை குறித்து உரையாற்றினார்."நான் 90-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் என் வாழ்வின் நோக்கம் அமைதி, கருணை, சகோதரத்துவம் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்" எனவும் அவர் தெரிவித்தார்.

தலாய் லாமாவின் 90வது பிறந்த நாள் விழா என்பது ஒரு சாதாரண நாள் அல்ல;அது மனித நேயம், இரக்கம், அமைதி மற்றும் சகிப்புத் தன்மையின் நினைவூட்டலாகும்,அவரது வாழ்வும், பணியும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஒளி வீசும் விளக்காகவே நீடிக்கட்டும்.

-எல்.முருகராஜ்






Advertisement