ராகுலை யாரும் மதிப்பது இல்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி

55


புதுடில்லி: '' தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளையே பரப்பி வருவதால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சொல்வதை யாரும் பொருட்டாக மதிப்பது இல்லை,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.


இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் போட மாட்டோம். நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார்.


இதனை விமர்சித்து ராகுல் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ' மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். எனது வார்த்தையை குறித்து வைத்து கொள்ளுங்கள். டிரம்ப் விதித்த காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார்,' எனத் தெரிவித்து இருந்தார்.


இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:
எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது. நாட்டின் நலனை மனதில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உலகம் முழுவதும் எங்களின் பணிகளில் நாட்டின் நலனுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இன்று இந்தியா வலிமையான நிலைப்பாட்டுடன் பேசி வருகிறது. நாங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். உலகில் யாருடனும் போட்டிபோடும் நிலையில் இருக்கிறோம். தற்போது இருப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா அல்ல. அப்போது நாட்டு நலனுக்கு அல்லாமல் பேச்சுவார்த்தைக்காக கெஞ்சினர்.


ராகுலும், அவரது சகாக்களும், அவரது கட்சியும் எதிர்மறை விஷயத்தையே பரப்பி வருகின்றனர். இதனால், ராகுலை யாரும் ஒரு பெரிதாக எடுப்பது இல்லை. அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர். காங்கிரசை மக்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். இன்று வரை நாட்டின் வளர்ச்சிக்காக, அவர்களால் நேர்மறையான திட்டங்களுடன் வர முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement