திருக்காலிமேடில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பகுதியில், பாதாள சாக்கடை இணைப்பிற்காக, 'பைபர்' குழாய் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், 1975ல், நகராட்சியாக இருந்தபோது, 40 வார்டுகளுக்கு மட்டும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது.

தற்போது, செவிலிமேடு பேரூராட்சி மற்றும் ஓரிக்கை, நத்தப்பேட்டை ஊராட்சி ஆகியவை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு எல்லை விரிவடைந்துள்ளதால், வார்டு எண்ணிக்கை 51ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், 350 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.

இதில், முதற்கட்டமாக செவிலிமேடு, ஓரிக்கை பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணி நடந்தது. தற்போது, திருக்காலிமேடில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.

இதில், முதற்கட்டமாக கடந்த மே மாதம், 'மேன்ஹோல்' சிமென்ட் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது, மேன்ஹோல் தொட்டியை இணைக்கும் வகையில், 'பைபர்' குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

குழாய் பதித்தபின், பள்ளம் தோண்டப்பட்டதால் சேதமான சாலையை தார் கலவை மூலமாக சீரமைக்க வேண்டும் என, திருக்காலிமேடு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement