இருளில் மூழ்கி கிடக்கும் பொன்னேரிக்கரை சந்திப்பு சாலை

காஞ்சிபுரம்:பொன்னேரிக்கரை கூட்டு சாலையில், உயர்கோபுர மின்விளக்குகள் எரியாததால், பேருந்திற்கு காத்திருப்போர் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பொன்னேரிக்கரை சந்திப்பு சாலை உள்ளது. இங்கு, காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்து மற்றும் பிற வாகனங்கள், காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் பேருந்து மற்றும் பிற வாகனங்கள் செல்கின்றன.

இந்த பொன்னேரிக்கரை சந்திப்பு சாலையில், இரண்டு உயர்கோபுர மின்விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் மழை பெய்தால் எரிவதில்லை.

இதனால், பொன்னேரிக்கரை சந்திப்பு சாலை இருளில் மூழ்கும் சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக, தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் பிற வழித்தடங்களில் இருந்து, மாற்று பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணியர், இருளில் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement