பின்லாந்தில் நடக்கும் சர்வதேச மாநாடு; பாரதியார் பல்கலை மாணவர்கள் தேர்வு

1

கோவை: பின்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டில், கோவை பாரதியார் பல்கலையின் ஆராய்ச்சி மாணவர்கள் இருவர் ஆய்வுக்கட்டுரை சமர்பிக்கின்றனர்.

பின்லாந்து நாட்டில், டர்கூ பல்கலை சார்பில், 32வது சர்வதேச பாலிபீனால்கள் மாநாடு ஜூலை, 7 முதல், 10 வரை நடக்கிறது. உலகின் பல்வேறு நாட்டின் சிறந்த பல்கலையில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க உள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலையின் தாவரவியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் பெனடிக்ட் மேத்யூஸ் பால் மற்றும் கவுதம் கண்ணன் ஆகிய இருவரும் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க தேர்வாகினர்.


பெனடிக்ட் மேத்யூஸ் பால், மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மூலிகைகள் மூலம், தோள்பட்டை புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். கவுதம் கண்ணன், டி.எஸ்.டி., - எஸ்.இ.ஆர்.பி., பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் ஆய்வு திட்டத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர், சர்வதேச மாநாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மருந்துப் பயனுள்ள மூலிகைகளில் புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை தொடர்பான ஆய்வுகளை சமர்ப்பிக்க உள்ளார்.

இவ்விரு ஆய்வுகளும் புற்றுநோய், ஒவ்வாமை ஆகிய உலகளாவிய சுகாதார சவால்களை தீர்க்க மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மூலிகை மருத்துவ செயல்திறன்களை வெளிப்படுத்துகின்றன. மாணவர்களை பல்கலையின் அறிவியல் புல டீன் பரிமேலழகன் உள்ளிட்டோர் பாராட்டினர். மாணவர்கள் இருவருக்குமான செலவுகளை, மத்திய அரசின் அனுஸந்தான் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் சர்வதேச நிதியுதவி திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement