முன்னோர் பெயரில் பட்டாசிறப்பு முகாமில் மாற்ற வாய்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விவசாயிகள், தங்களின் முன்னோர்கள் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் செய்ய ஜூலை 9ல் தாசில்தார் அலுவலங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது ,என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, சகோதரத்துறை அலுவலர்களால் இணையத்தில் கட்டணமின்றி பதிவு செய்யப்படுகிறது. மேலும் இனி வரும்காலங்களில் மத்திய, மாநில அரசு திட்டங்கள், பிரதமரின் விவசாய ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் இப்பதிவுகள் அடிப்படையில் வழங்கப்படும்.

தற்போது விவசாய ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்களின் நில உடைமை விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தவணை வழங்க முடியும். மாவட்டத்தில் மொத்தமுள்ள 1.03 லட்சம் விவசாயிகளில் இதுவரை 39, 428 பேர் பதிவு செய்யாமல் உள்ளனர். இதில் பலர் முன்னோர் பெயரில் பட்டா உள்ளதால் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை.

இவர்களுக்காக ஜூலை 9ல் காலை 10:00 மணிக்கு அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் முன்னோர்கள் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் விவசாயிகள் தேவையான ஆவணங்களை நேரில் கொண்டு வந்து பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement