வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் போலீஸ் பைக்கில் இருந்து குதித்து தப்பியோட்டம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில் வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது, பைக்கில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், காரணை பெரிச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் ஜெகன், 45; பைனான்ஸ் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் பைனாஸ் வசூல் முடித்து கொண்டு அரகண்டநல்லுாரில் இருந்து ஆற்காடு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

காக்காகுப்பம் ஓடை அருகே சென்றபோது, எதிரில் பைக்கில் வந்த கீழக்கொண்டூரை சேர்ந்த அபிமன்யு மகன் பிரவீன், 27; மற்றும் இரண்டு பேர் ஜெகனை வழிமதித்து, அவரிடம் இருந்த 50,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் நேற்று வழக்கு பதிந்து பிரவீனை கைது செய்தனர்.

நேற்று மாலை 3:45 மணிக்கு, போலீஸ்காரர்கள் மணிவண்ணன், பாண்டியன் இருவரும், பிரவீனை பைக்கில் அமர வைத்து மருத்துவ பரிசோதனைக்காக திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் பைக்கை நிறுத்தியவுடன், பிரவீன் பைக்கில் இருந்து கீழே குதித்து அங்கிருந்து தப்பி ஓடினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கூச்சலிட்டத்தைத் தொடர்ந்து, பொதுமக்களும் இணைந்து தேடினர். கைது செய்யப்பட்ட பிரவீன் மாயமானது குறித்து மற்ற போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் திருக்கோவிலுார் போலீசார் பல்வேறு இடங்களில் இரவு 9:00 மணி வரை தேடியும், பிரவீனை பிடிக்க முடியவில்லை. இந்த தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி., அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை மேற்கொண்டார்.

Advertisement