5 மாதங்களில் 1,65,136 பேருக்கு நாய்க்கடி: 17 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி; கேரளாவில் ஷாக்

4

திருவனந்தபுரம்; கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



தமிழகத்தில் தெருநாய்க்கடி, ரேபிஸ் தாக்குதலைத் தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்தை போன்றே கேரளாவிலும் தெருநாய்க் கடியால் ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவோரின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.


அம்மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 17 பேர் ரேபிஸ் தாக்கி பலியாகி உள்ளனர். அதிலும், தெரு நாய்க்கடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மட்டும் 1,65,136 பேர் ஆகும். இந்த விவரங்கள் அனைத்தும் சமூக ஆர்வலர் ராஜூ என்பவரின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளி வந்துள்ளது.


குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டுமே 9,619 பேர் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலும் நாய்க்கடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


ரேபிஸ் உயிரிழப்பில், ஆழப்புழா மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 4 பேர் ரேபிஸ் தாக்கி பலியாகி உள்ளனர். கொல்லம், மலப்புரம் மாவட்டங்களில் தலா 3 பேரும், எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்தபுரம் மாவட்டங்களில் தலா ஒருவரும் ரேபிஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.


இதையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வை மிஷன் ரேபிஸ் என்ற தன்னார்வ அமைப்பின் விரைவில் செயல்படுத்த சுகாதாரத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

Advertisement