புற்றீசலாய் தோன்றும் இறைச்சி கடைகள் சாலையில் குவியும் நாய்களால் அபாயம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?

திருவாலங்காடு:திருவாலங்காடில் புற்றீசல் போல இறைச்சி கடைகள் தோன்றுவதால், கழிவுகளை சாப்பிட நாய்கள் சாலையில் கூடுகின்றன. அவை சாலையில் சண்டையிடுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, தேரடி முதல் சர்க்கரை ஆலை நால்ரோடு வரை 100க்கும் மேற்பட்ட கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகள் அமைக்கப்படுகின்றன.

இவர்களுக்கு சந்தை கூடம் இல்லாததால், நெடுஞ்சாலையோரத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இறைச்சி வாங்க வரும் வாடிக்கையாளர்கள், சாலையிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

இதனால், திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வழியாக செல்லும் ஆட்டோ, கார், பேருந்து போன்ற வாகனங்கள், மெதுவாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதேபோல், சாலையோர இறைச்சி கடைகளின் கழிவுகளை உண்ண வரும் நாய்கள் சாலையில் சண்டையிடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாலங்காடில் இறைச்சிக்கு தனி கூடம் அமைக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியாக இறைச்சி கூடம்

அமைக்க கோரிக்கை

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பகுதியில் ஆங்காங்கே இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தனியாக இறைச்சி கூடம் அமைத்து தர வேண்டும். அப்படி அமைக்கப்பட்டால் எங்களின் வியாபாரம் பெருகும்.

- இறைச்சி வியாபாரிகள், திருவாலங்காடு.

Advertisement