'ஸ்பைஸ் ஜெட்' விமானம் கோளாறு ; சென்னை பயணியர் கடும் கொதிப்பு

சென்னை : இயந்திரக் கோளாறு காரணமாக, சென்னையில் இருந்து துாத்துக்குடி செல்லும் 'ஸ்பைஸ் ஜெட்' பயணியர் விமானம், மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணியர் கொதிப்படைந்தனர்.

சென்னையில் இருந்து துாத்துக்குடி செல்லும், 'ஸ்பைஸ் ஜெட்' தனியார் விமானம், நேற்று காலை 10:10 மணிக்கு புறப்பட்ட தயாரானது.

விமானத்தில் 65 பயணியர் உட்பட 70 பேர் இருந்தனர். விமான நடைமேடை 51ல் இருந்து, ஓடுபாதைக்கு விமானம் கொண்டு வரப்பட்டு, புறப்பட தயாரான நிலையில், விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். உடனடியாக, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஓடுபாதையிலே விமானம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து விமான பொறியாளர் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பயணியர், சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானம் பழுது பார்க்கப்பட்டு தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. மூன்று மணி நேரம், பயணியர் அங்கேயே காத்திருந்ததால் கொதிப்படைந்தனர்.

விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, மதியம் 1:52 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம், துாத்துக்குடி நோக்கி சென்றது.

Advertisement