வரதட்சணைக்கு எதிராக போராடும் சஹானா

இன்றைய காலத்தில் புதுமண தம்பதிகள் திருமண வாழ்க்கையில், வரதட்சணை என்ற அரக்கனால் புயல் வீசுகிறது.

வரதட்சணை வாங்கி வர மறுப்பதால் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன. மனம் நொந்து தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளப்படுகின்றனர். வரதட்சணைக்கு எதிராக சஹானா என்ற பெண் விழிப்புணர்வு நாடகம் மூலம் போராட்டம் நடத்துகிறார்.

இதுகுறித்து சஹானா கூறியதாவது:

எனது சொந்த ஊர் பல்லாரியின் எச்.வீராபுரா கிராமம். பெற்றோர் பருத்தி பதப்படுத்தும் வேலை செய்தனர். எங்கள் கிராமத்தில் கடந்த 1980 முதல் 1990 காலகட்டங்களில் சரியான பள்ளி வசதி இல்லாததால், எனது மாமா அப்துல்லா, அவரது ஊரான ஹொஸ்பேட் அழைத்து சென்று படிக்க வைத்தார்.

நான் ஏழாம் வகுப்பு படித்த போது, கணவர் வீட்டினர் கொடுத்த வரதட்சணை கொடுமையால் தெருவில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி, ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். என்ன நடக்கிறது என்றே எனக்கு அப்போது தெரியவில்லை.

நான் பத்தாம் வகுப்பு படித்த போது தான், வரதட்சணையால் பெண்கள் படும் கொடுமை பற்றி அறிந்து கொண்டேன். எனது மாமா அப்துல்லா, தெரு நாடகங்கள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரிடம் வரதட்சணைக்கு எதிராக நாடகங்கள் அரங்கேற்றலாம் என்று கூறினேன்.

மாமா இயற்றிய நாடகங்களில் வரதட்சணையால் பெண்களுக்கு அனுபவம் கஷ்டங்கள் குறித்து, நானே நடித்து காட்டினேன்.

கல்லுாரி படிப்பு முடிந்ததும், டில்லியில் உள்ள தேசிய நாடக பள்ளியில் படித்து பட்டம் பெற்றேன். நாடக பிரிவில் பெங்களுரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றேன். நான் சார்ந்த பிஞ்சாரா சமூகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் நான் தான்.

திருமணத்திற்கு பின் எனது கணவர் ரியாஸுடன் இணைந்து, வரதட்சணைக்கு எதிரான தெருநாடகங்களை தொடர்ந்து நடத்தினோம். இதுவரை பல்லாரி, விஜயநகரா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட நாடகங்கள் நடத்தி உள்ளோம். வரதட்சணையால் உயிரிழக்கும் பெண்களின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவும் போராடுகிறேன். பல வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து இருக்கிறேன். நாங்கள் நடத்தும் நாடகங்களால் மனம் திருந்தியவர்களும் நிறைய பேர் உள்ளனர்.

அனாதை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு நானும், கணவரும் சேர்ந்து பாட்டு பாடுதல், நடனம் ஆடும் பயிற்சி அளிக்கிறோம். மேடை நாடகங்களிலும் நடிக்க ஊக்குவிக்கிறோம். எனது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவாக இருந்தது மாமா அப்துல்லாவும், கணவர் ரியாஸ் தான். வரதட்சணையை ஒழிக்கும் வரை, எங்கள் தெருநாடக விழிப்புணர்வு தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.




--- நமது நிருபர் -

Advertisement