ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா

துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான கோல்டன் விசா 4 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் மற்றும் திறமையான நிபுணர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தினருக்கு, 23 லட்சம் ரூபாய் கட்டணத்தில் புதிய வகை கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் முதலீடுகளை அதிகரிக்கவும், சுற்றுலா பயணியரைக் கவரவும் கோல்டன் விசா வழங்கி வருகிறது.


கோல்டன் விசா பெறுபவர் பணி சான்று உட்பட எவ்வித ஆவணங்களும் இன்றி, 10 ஆண்டுகள் வரை அந்நாட்டில் தங்க முடியும்.

கோல்டன் விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், உள்ளிட்டோருக்கு மிக எளிதாக விசா பெற்றுத்தர முடியும்.

மேலும், முதலீடுகள் வாயிலாக ஈட்டும் வருமானத்துக்கு வரி கிடையாது. கோல்டன் விசா இருந்தால் 133 நாடுகளுக்கு விசா- இல்லாமல் பயணிக்கலாம்.

இந்த கோல்டன் விசா யு.ஏ.இ.,யின் ரியல் எஸ்டேட் தொழிலில் 4.66 கோடி ரூபாய் வரை முதலீடு செய்வர்கள், மிகப்பெரும் தொகையை அந்நாட்டு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இது தவிர சினிமா உள்ளிட்ட துறைகளில் சாதித்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது.


இந்நிலையில் புதிய வகை கோல்டன் விசா திட்டத்தை முதன் முறையாக இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். நியமன கோல்டன் விசா எனப்படும் இதை, 23.30 லட்சம் ரூபாய் செலுத்தினால் பெற முடியும்.


இதற்கு முதலில் நம் நாட்டு அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். பின் யு.ஏ.இ., அங்கீகரித்த ஆலோசனை நிறுவனம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதை யு.ஏ.இ., அரசு ஆய்வு செய்து கோல்டன் விசா வழங்கும்.

Advertisement