தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள் 

1

கோவை; மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு என மின்வாரியமும், அமைச்சர்களும் கூறி வரும் நிலையில், போட்டி மாநிலங்களை விட அதிகம் என, புள்ளி விவரங்களோடு தொழில்துறையினர் போட்டுடைத்துள்ளனர். மேலும், அ.தி.மு.க., ஆட்சிக் காலத்துக்கும் தற்போதைக்கும் எத்தனை மடங்கு உயர்ந்திருக்கிறது என ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.


இதன்படி, 2021ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் உயரழுத்த மின் இணைப்புக்கான ஒரு யூனிட் மின் கட்டணம் 18 சதவீதம், தேவைக் கட்டணம் (டிமாண்ட் சார்ஜஸ்) 73.71 சதவீதமும், தாழ்வழுத்த மின் இணைப்புக்கு யூனிட் கட்டணம் 30 சதவீதமும், நிலைக்கட்டணம் 471 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக, மறு சுழற்சிக் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறியதாவது:



மின் கட்டண உயர்வை விட, இதர கட்டண உயர்வு தொழில்துறையை கடுமையாக நலிவடையச் செய்துள்ளது. உயரழுத்த மின் இணைப்புக்கான டிமாண்ட் சார்ஜ், கிலோ வாட்டுக்கு ரூ.350 ஆக இருந்தது. தற்போது ரூ.608 ஆக உள்ளது. இதன்படி, 500 கிலோவாட் வாங்கி இருந்தால், ஆலை இயங்கினாலும் இயங்காவிட்டாலும் மாதத்துக்கு ரூ.3 லட்சத்து, 4 ஆயிரம் செலுத்த வேண்டும். இதுவே, 2021ல் ரூ.1.75 லட்சமாக இருந்தது.


அதேபோல, 112 கிலோவாட் வரையிலான தாழ்வழுத்த மின் இணைப்புக்கு மின்கட்டண இணைப்பு அல்லாமல், நிலைக்கட்டணமாக மட்டும் ரூ.18,480 செலுத்தியே ஆக வேண்டும். இது, 2021 வரை ரூ.3,920 ஆக மட்டும் இருந்தது. இதுவே, 150 கிலோவாட் மின் இணைப்பு பெற்றவர், ரூ.91,200 செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை ஆலை இயங்காவிட்டாலும் செலுத்த வேண்டும். நாட்டின் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற கட்டணம் இல்லை. இதனால் சிறு, குறு நிறுவனங்கள் பிற மாநிலங்களுடன் போட்டியிட முடியவில்லை.


எனவே, விவசாயத்துக்கும், விசைத்தறிக்கும் மானியம் வழங்கும் தமிழக முதல்வர், சோலார் மின்சாரத்தை ஊக்குவித்து, பம்ப்செட் மற்றும் விசைத்தறிக்கு அரசு செலவில் அமைத்துக் கொடுத்தால், 4 ஆண்டுகளில் முதலீடு செய்த நிதியைத் திரும்பப் பெற இயலும். மாநில நிதி செலவினங்களைக் குறைப்பதுடன், தொழில்வளர்ச்சிக்கும் உதவ இயலும்.


நாட்டில் அதிக தொழில்முனைவோர் அதிகம் உள்ள மூன்றாவது மாநிலமான தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வர முதல்வர் விரும்புகிறார். ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகள் முரணாக உள்ளன.


எனவே, ஒழுங்குமுறை ஆணையத்துக்கும், மின் வாரியத்துக்கும் தகுந்த ஆலோசனை வழங்கி, பிற மாநிலங்களின் மின்கட்டணத்துடன் ஒப்பிட்டு, கட்டணைத்தைக் குறைக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Latest Tamil News

Advertisement