திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு; தடையை மீறி போராடுவேன் என்கிறார் சீமான்

1


சென்னை: போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்புவனத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ''மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன்'' என சீமான் தெரிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமார், 30; பேராசிரியை நிகிதாவின் நகை மாயம் குறித்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரிக்கப்பட்ட போது இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க., - பா.ஜ., சார்பில் திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்புவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார் ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.


ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பில் 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. கோவில் தேரோட்டங்கள், வாரச்சந்தை நடைபெறுவதால் அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தடையை மீறி....!



இதற்கிடையே நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: கோவில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன். போராட்டம் நடத்த அனுமதி மட்டும் தான் கேட்போம். பாதுகாப்பு கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement