சமூக வலைதள பதிவுக்காக சிறையில் அடைப்பதா: மாஜிஸ்திரேட்களுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

15

ஐதராபாத்: உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் சமூக வலைதள பதிவுக்காக ஒருவரை சிறையில் அடைத்தால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுகின்றன. இவ்வாறு கருத்து பதிவிடுவோரை கைது செய்து சிறையில் அடைப்பதும் நடக்கிறது.


இவ்வாறு சமூக வலைதள பதிவுக்காக ஒருவர் மீது புகார் தரப்பட்டால் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.


அதையும் மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், அதைத் தடுக்க ஆந்திரா உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.


மாஜிஸ்திரேட்களுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் :


சமூக வலைதள பதிவுகளுக்காக ஒருவரை சிறையில் அடைக்கும் போது, அது தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


சமூக வலைதள பதிவுகளுக்காக ஒருவரை இயந்திரத்தனமாக சிறையில் அடைத்து விடக்கூடாது.


சமூக வலைதள பதிவுகள் அல்லது கமெண்ட் பதிவுக்காக ஒருவரை சிறையில் அடைக்கும் போது, உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி உள்ளோமா என்று தங்களுக்கு தாங்களே ஆய்வு செய்து திருப்தி அடைந்த பிறகு, அதை செய்ய வேண்டும்.


கைது செய்யப்படாவிட்டால், ஒருவர் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று உறுதியாக நம்பினால் மட்டுமே சிறையில் அடைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத மாஜிஸ்திரேட்டுகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement