'படைத்தலைவன்' சுப்மன்... * பர்மிங்ஹாம் வெற்றியால் பெருமிதம்

பர்மிங்ஹாம்: ''பர்மிங்ஹாம் டெஸ்ட் வெற்றி, நான் ஓய்வு பெறும் போது இனிய நினைவுகளை தரும்,'' என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. ரோகித், கோலி, அஷ்வின் என பல 'சீனியர்கள்' ஓய்வு பெற்ற நிலையில் 25 வயதான சுப்மன் கில், டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்றார்.
முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (267+163) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார்.
சுப்மன் கில் 25, கூறியது:
பர்மிங்ஹாம் வெற்றி மறக்க முடியாதது. கிரிக்கெட் வாழ்க்கையில் மீதமுள்ள நாட்களில் இது என்றும் நினைவில் நிலைத்து நிற்கும். நான் ஓய்வு பெற்றாலும் இது தொடரும். கடைசி விக்கெட்டை நான் 'கேட்ச்' செய்து, போட்டியை முடித்து வைத்துள்ளேன். அடுத்து 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் 2வது போட்டியில் வென்றது உற்சாகம் தரும்.
பேட்டிங், பவுலிங் என அணி வீரர்கள் ஒவ்வொரும், வெவ்வேறு தருணங்களில், வெற்றிக்கு தங்கள் பங்களிப்தை தந்துள்ளனர். இது தான் சாம்பியன் அணியை உருவாக்கும். இதற்கான சிறந்த அறிகுறியாக, இந்த வெற்றி அமைந்துள்ளது.
ஒரு டெஸ்டில் வெற்றி பெறுவது எவ்வளவு கடினம் என்பதை கடந்த 6 முதல் 8 மாதங்கள் நன்றாக எனக்கு உணர்த்தியது. இதுவரை எட்ஜ்பாஸ்டனில் வென்றதே இல்லை என்ற சூழலில், தற்போது வெற்றி பெற்றது எவ்வளவு சிறப்பானது.
இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகளான ஆடுகளங்களில் கூடுதலாக பேட்டர் தேவை என்பதால் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்கினேன். குல்தீப்பை சேர்க்க முடியவில்லை. நானும், வாஷிங்டன் சுந்தரும் அமைத்த 'பார்ட்னர்ஷிப்' (141 ரன்) மிக முக்கியம். இது, மனதளவில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீண்ட நேரம்
சுப்மன் கில் கூறுகையில், ''ஒவ்வொரு போட்டி, தொடர் முடிந்தவுடன் மக்களின் மனநிலை மாறி விடுகிறது. அதேநேரம் இவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. சிறந்த முறையில் வீசப்படும் பந்து, என்னை அவுட் செய்து விடும். இதற்கு முன் முடிந்த வரை நீண்ட நேரம் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்,'' என்றார்.
இது சிறந்த அணி
சுப்மன் கில் கூறுகையில்,''பொதுவாக புள்ளி விபரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த 58 ஆண்டில், வெவ்வேறு இந்திய அணியினர், இங்கு 7 டெஸ்டில் விளையாடியது. இந்நிலையில் இப்போதுள்ள இந்திய அணி தான் சிறந்தது என நம்புகிறேன். ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் அவர்களை வீழ்த்தி, தொடரை வெல்லும் திறன் எங்களுக்கு உள்ளது. தொடர்ந்து போராடினால், சிறந்த தொடரில் ஒன்றாக இது அமையும்,'' என்றார்.
பவுலர்கள் பரிதாபம்
சுப்மன் கில் கூறுகையில்,'' ஆடுகளம் பேட்டிங்கிற்கு மட்டுமன்றி, பவுலர்களுக்கும் கைகொடுக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் விக்கெட் வீழ்த்த முடியாது எனத் தெரிந்து விட்டால், அனைத்தும் நமது கைமீறி போய்விடுகின்றன. பவுலர்களுக்கு சற்று உதவினால் தான் ஏதாவது திட்டமிட முடியும்,'' என்றார்.
பாராட்டு மழையில்...
சச்சின்: டெஸ்டில் வேகமாக ரன் சேர்க்கும் இங்கிலாந்து அணியை, போட்டியில் வெல்ல முடியாத சூழலை ஏற்படுத்தி, வழக்கமான 'ஸ்டைலில்' இருந்து மாறுபட்ட நிலையில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளும் வகையில், இந்திய அணி வீரர்களின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது. நாங்கள் மட்டுமே வெற்றியாளர் என்பதை உறுதி செய்தனர்.
'ஷார்ட் மிட் விக்கெட்' திசையில் முகமது 'ஜான்டி' சிராஜ் (தென் ஆப்ரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் போல), வலது புறமாக 'டைவ்' அடித்து 'கேட்ச்' செய்ததை பார்த்தேன், ரசித்தேன்.
கோலி: எட்ஜ்பாஸ்டனில் இந்தியா சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. துணிச்சலாக போராடி, இங்கிலாந்து அணியை தோல்விக்கு கொண்டு சென்றது. பேட்டிங், பீல்டிங்கில் கேப்டனாக சுப்மன் கில் வியக்கவைத்தார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் சிராஜ், ஆகாஷ் அசத்தினர்.
கங்குலி: பும்ரா இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. சுப்மன் தலைமையில் இதைவிட சிறந்த வெற்றி இனி இருக்கப் போவதில்லை.
மேலும்
-
இடுக்கியில் ஜீப் சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை
-
ரிதன்யா தற்கொலையில் கோர்ட் ஜாமின் மறுப்பு
-
துாத்துக்குடி பா.ஜ., ஆபீசில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
-
கட்டு விரியன் கடித்த சிறுவன் 10 நாள் சிகிச்சைக்கு பின் நலம்
-
கட்டு விரியன் கடித்த சிறுவன் 10 நாள் சிகிச்சைக்கு பின் நலம்
-
கட்டு விரியன் கடித்த சிறுவன் 10 நாள் சிகிச்சைக்கு பின் நலம்