சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலையில் பட்டமளிப்பு விழா

சேலம் :சேலம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா, சேலம் சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லுாரியில், பல்கலை கழக வேந்தர் கணேசன் தலைமையில்
நடந்தது.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறை முன்னாள் இயக்குனரும், புனே பல்கலை பேராசிரியருமான டாக்டர் சேகர் சி.மான்டே சிறப்பாளராக பங்கேற்று பேசுகையில், ''உங்கள் சாதனைகளை கொண்டாடும் இதே வேளையில், சமூகத்தை முன்னெடுத்து செல்லக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. பட்டங்களை பெற உழைத்ததை போன்றே சமூகத்துக்காகவும் கடினமாக உழைத்து நாட்டுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் பெருமை தேடி தர வேண்டும்,'' என்றார்.

விழாவில், மலேசிய பல்கலை கழகத்தின் இணை வேந்தர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகமது ஹனிபா பின் அப்துல்லாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை, பேராசிரியர் மான்டே வழங்கினார். பல்கலை கழத்தின் கீழ் செயல்பட்டு வரும், 13 உறுப்பு கல்லுாரிகளின் பல்வேறு துறைகளை சேர்ந்த, 3,962 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இதில் 54 முனைவர் பட்டம், 113 தங்கப்பதக்கம், 95 வெள்ளிப்பதக்கம், 83 வெண்கல பதக்கம் பெற்று மாணவ, மாணவியர் சாதனை புரிந்தனர். விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டத்தோ சரவணன், பல்கலை கழக துணைத் தலைவர்கள் சந்திரசேகர், அனுராதா, துணைவேந்தர் சுதிர், இணை துணைவேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement