மின் வாரியத்தில் பயிற்சி முடித்தவர்கள் ஆர்ப்பாட்டம்

1

சென்னை: தமிழக மின் வாரியத்தில், 'அப்ரென்டிஸ்' எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள், காலியாக உள்ள பணியிடங்களில் தங்களை நியமிக்க கோரி, சென்னை மின் வாரிய தலைமை அலுவலக பின்புறம் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:

மின் வாரியத்தில் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள், வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

'அப்ரென்டிஷிப்' சட்டப்படி, மின் வாரியம் கொள்கை முடிவு எடுத்து, தொழில் பழகுநர் பயிற்சி முடித்த, ஐ.டி.ஐ., டிப்ளமா, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, நேரடி பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை, வாரியம் அமல்படுத்த வேண்டும்.

கொரோனா காலத்தில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள், உயிரை பொருட்படுத்தாமல் வாரியத்திற்கு பணியாற்றினர். எனவே, மின் வாரியத்தில் காலி பணியிடங்களுக்கு, ஐ.டி.ஐ., டிப்ளமா, இன்ஜினியரிங் பட்டதாரிகளில், தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement