காங்.,கின் 181 கிரவுண்ட் நிலத்தை எதிர்த்து மனு போட்டவர் வாபஸ்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, சொந்தமான நிலம் தொடர்பாக, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில், காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக, 181 கிரவுண்ட் நிலம் உள்ளது. காமராஜர் அரங்கம் அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில், வணிக வளாகம் கட்ட, 'ப்ளூ பேர்ல்' என்ற தனியார் நிறுவனத்துடன், காங்கிரஸ் அறக்கட்டளை, 1996ல் ஒப்பந்தம் போட்டது.

பின், தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில், திறந்தவெளி நிலத்தை பராமரிப்பது தொடர்பாக, காங்கிரஸ் அறக்கட்டளை, ஆட்சேபமில்லா சான்று வழங்காதது உட்பட, பல்வேறு காரணங்களால், இதுவரை கட்டுமானப் பணிகள் துவங்கப்படவில்லை.

இந்நிலையில், ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாக கூறி, தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை, காங்கிரஸ் அறக்கட்டளை கையகப்படுத்தியது. இதை எதிர்த்து, மத்தியஸ்தர் முன், தனியார் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு முடிவுக்கு வரும் வரை, நிலத்தில் தங்கள் உரிமையில் தலையிட, காங்கிரஸ் அறக்கட்டளைக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ப்ளூ பேர்ல் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மனுவில், 'இன்னும் ஒப்பந்தம் காலாவதி ஆகவில்லை; ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், நிலத்தை வலுக்கட்டாயமாக, காங்கிரஸ் அறக்கட்டளை சுவாதீனம் எடுத்துள்ளது' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனம் தரப்பில், 'வழக்கை திரும்பப் பெற அனுமதி அளிக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement