நடிகை நயன்தாராவுக்கு அடுத்தடுத்து சிக்கல்: நஷ்ட ஈடு கோரி ரஜினி பட நிறுவனம் வழக்கு

1

சென்னை: நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ள, சந்திரமுகி படத்தின் காட்சிகளை நீக்க கோரிய மனுவுக்கு, ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமும், 'நெட் பிளிக்ஸ்' நிறுவனமும், இரண்டு வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமணம் தொடர்பான ஆவணப்படத்தை, 'டார்க் ஸ்டுடியோ' என்ற நிறுவனம் தயாரித்தது.

இந்த ஆவணப்படம், கடந்த ஆண்டு நவம்பரில், 'நெட் பிளிக்ஸ்' ஓ.டி.டி., தளத்தில் வெளியானது. இப்படத்தில், நானும் ரவுடி தான் பட காட்சிகளை, அதை தயாரித்த, 'வொண்டர் பார்' நிறுவன அனுமதி பெறாமல், நயன்தாரா பயன்படுத்தி உள்ளார்.

'எனவே, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சந்திரமுகி பட காட்சிகளை, அனுமதி பெறாமல் பயன்படுத்தி உள்ளதாக குற்றஞ்சாட்டி, படத்தின் பதிப்புரிமை பெற்ற, 'ஏபி இன்டர்நேஷனல்' நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மனுவில், 'ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்; அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும். ஆவணப்படம் வாயிலாக ஈட்டிய, லாப கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, 'மனுவுக்கு டார்க் ஸ்டுடியோ மற்றும் நெட் பிளிக்ஸ் நிறுவனங்கள், இரண்டு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

Advertisement