வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துாரில் 18 ஏரிகள் வறண்டன; விவசாயிகள் கவலை

வேலுார், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், நீரின்றி, 18 ஏரிகள் வறண்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம். இங்கு நெல், நிலக்கடலை, காய்கறி, மலர் சாகுபடி நடக்கிறது. விவசாயத்திற்கு, ஏரி, ஆறு, கிணறு, மற்றும் போர்வெல்லை விவசாயிகள் நம்பியுள்ளனர். மூன்று மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பாலாறு, வறண்டுள்ளது.

மூன்று மாவட்டங்களிலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 519 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் கன மழையால் ஏரிகள் நிரம்புவது வழக்கம். கோடையில், 3 மாவட்டங்களிலும், கோடையை போன்றே தற்போதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், 3 மாவட்டங்களிலும், 18 ஏரிகள் வறண்டுள்ளன. இதனால், இந்த ஏரிகளை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வேலுாரில், 101 ஏரிகள், ராணிப்பேட்டையில், 369, திருப்பத்துாரில், 49, என மூன்று மாவட்டங்களிலும், 519 ஏரிகள் உள்ளன. வேலுாரில், 9 ஏரிகளில், 76 முதல், 99 சதவீதம், 31 ஏரிகளில், 51 - 75 சதவீதம், 22 ஏரிகளில், 26 - 50 சதவீதம், 37 ஏரிகளில், 25 சதவீதத்திற்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது. திருப்பத்துாரில், 3 ஏரிகளில், 76 - 99 சதவீதம், 4 ஏரிகளில், 51 - 75 சதவீதம், 21 ஏரிகளில், 26 - 50 சதவீதம், 15 ஏரிகளில், 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நீர் இருப்பு உள்ளன. ராணிப்பேட்டையில், 64 ஏரிகளில், 76 - 99 சதவீதம், 148 ஏரிகளில், 51 - 75 சதவீதம், 126 ஏரிகளில், 26 - 50 சதவீதம், 19 ஏரிகளில், 25 சதவீதத்திற்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது.
திருப்பத்துாரில், 2 ஏரிகளில் மட்டுமே, 100 சதவீதம் தண்ணீர் உள்ளது. வேலுாரில், 2, ராணிப்பேட்டையில், 12, திருப்பத்துாரில், 4 என்று மொத்தம், 18 ஏரிகள் வறண்டுள்ளன' என்றனர்.
இது குறித்து- கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநில செய்தி தொடர்பாளர் புருேஷாத்தமன் கூறியதாவது:
இந்தாண்டு கோடை வறட்சியால், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆடிப்பட்ட சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில், வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்துள்ளோம், மழை குறைவாக பெய்தால், விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலை உருவாகும். மழை கூடுதலாக, குறைவாக பெய்தாலும், கோடை வறட்சியிலும் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement