இளம்பெண்ணை ஏமாற்றி மோசடி; கிரிக்கெட் வீரர் மீது வழக்கு

1

காஜியாபாத் : திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்து ஏமாற்றியதாக, இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி வீரர் யஷ் தயாள், 27, மீது உத்தர பிரதேச போலீசார் வழக்கு பதிந்தனர்.


உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கிரிக்கெட் வீரர் யாஷ் தயாலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். அதில், 'நானும், யாஷ் தயாலும் ஐந்து ஆண்டுகளாக உறவில் இருந்தோம். திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னுடன் பலமுறை நெருக்கமாக பழகினார். தற்போது திருமணத்துக்கு மறுத்து என்னை மோசடி செய்துவிட்டார்'
என, கூறியிருந்தார்.


இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால், ஜூன் 24ல் அதை சமூக வலைதளத்தில், அந்த பெண் பகிர்ந்தார். கிரிக்கெட் வீரருக்கு எதிரான புகார் என்பதால், அது இணையத்தில் வேகமாக பரவியது.



இதைத் தொடர்ந்து காஜியாபாத் போலீஸ் இணை கமிஷனர் நிமிஷ் பாட்டீல், பாதிக்கப்பட்டதாக கூறும் பெண்ணிடம் எழுத்துப்பூர்வ புகாரை பெற்றார். புகாரில், யாஷ் தயால் உடன் பேசிய வீடியோ அழைப்புகள், சமூக வலைதள அரட்டைகள் ஆகிய தகவல்களை இணைந்திருந்தார்.



அதை ஆய்வு செய்த போலீசார், யாஷ் தயால் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். நேற்று, இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement