கருவி கண்டுபிடிப்பாளர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: வேளாண் சாகுபடியில் செலவை குறைத்து, விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள், கருவிகள் கண்டுபிடித்துள்ளவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: வேளாண்மையை எளிது படுத்தும் விதமாகவும், குறைந்த செலவில் விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் தொழில்நுட்பங்கள், கருவிகள் கண்டுபிடிப்பவர்களுக்கு மாநில அளவில் பரிசு வழங்கப்பட உள்ளது. கண்டுபிடித்துள்ளவர்கள் உழவன் செயலி மூலம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

போட்டியில் பங்கேற்பவர்களின் சொந்த கண்டுபிடிப்புகளாக இருக்க வேண்டும். மகசூலை அதிகரிக்கும், நேரத்தை மிச்சம் செய்யும், எளிதில் பயன்படுத்த கூடிய படைப்புகளாக இருக்க வேண்டும். மற்ற கண்டுபிடிப்புகளின் மேம்பாடு, சாயல், காப்புரிமை மீறல் இருக்க கூடாது.

விண்ணப்ப கட்டணமாக ரூ. 150 செலுத்த வேண்டும். கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழு தேர்வு செய்து மாநில போட்டிக்கு தகுதியான கண்டுபிடிப்புகள் அனுப்பப்படும்.

மாநில அளவில் வெற்றி பெறும் முதல் 3 நபர்களுக்கு விருது, சான்றிதழுடன் பரிசுத்தொகையாக ரூ. 2.5 லட்சம், ரூ.1.5 லட்சம், ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். என்றனர்.

Advertisement