ராமேஸ்வரம் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்

2

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிவ ஆதினமடம் ஆசான் பாலகும்பமுனி தலைமையில் ஹிந்து ஜப்பான் பக்தர்கள் 20 பேர் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பூஜை, அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.



நேற்று ராமேஸ்வரம் வந்த இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்கள். பின் சுவாமி அருகில் உலக நன்மைக்காக ருத்ர பூஜை, யாக பூஜை செய்து தரிசனம் செய்தனர்.


பாலகும்பமுனி கூறியதாவது: 13 ஆண்டுகளுக்கு முன் டோக்கியோவில் கல்லுாரியில் படித்தபோது புதுச்சேரியை சேர்ந்த கோயில்பிள்ளை சுப்பிரமணியம் என்பவர் எனக்கு ஆசிரியராக இருந்தார். ஹிந்து கலாசாரங்கள், வழிபாட்டு முறைகள், கடவுள்கள் குறித்து அவர் சொல்லியுள்ளார். அதனால் ஹிந்து மதத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு புத்த மதத்தில் இருந்து ஹிந்துவாக மாறினேன். தொடர்ந்து சிவஆதின மடம் உருவாக்கி ஜப்பானில் ஹிந்து மதத்தின் பெருமைகள் குறித்து பேசி வருகிறேன். எங்கள் மடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளனர்.

தமிழ் கலாசாரம், பண்பாடு, சமய சடங்குகளை அறிய முக்கிய கோயில்களில் தரிசித்து வருகிறோம். திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோம். அடுத்து தஞ்சாவூர், திருவண்ணாமலை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதி கோயிலுக்கு செல்ல உள்ளோம்.




பின் வட மாநிலத்தில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு ஆகஸ்டில் ஜப்பான் செல்ல உள்ளோம். இவ்வாறு கூறினார்.

Advertisement