'சாலை விதிகளை மதிப்பது லட்சியம் நிறைவேற உதவும்'

அவிநாசி; திருமுருகன்பூண்டி அருகே, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், தலைமை வகித்தார். பூண்டி ரோட்டரி சங்க பட்டய தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, மாநகர போக்குவரத்து உதவி கமிஷனர் சேகர் பேசியதாவது:

நம் நாட்டில், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப, சாலைகள் மேம்படுத்தப்பட்டு, புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையில் மிகுந்த கவனம் மற்றும் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும். நம் நாட்டில் சாலை விபத்தில் சிக்கி, ஓராண்டில், 1.25 லட்சம் பேர் இறக்கின்றனர்; 6 லட்சம் பேர் காயமடைகின்றனர்.

குறிப்பாக, 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில், 30 ஆயிரம் பேர் சாலை விபத்து காரணமாக இறக்கின்றனர். விபத்தில் சிக்கி இறப்பது, காயமடைவது போன்றவற்றால் எதிர்காலம் பாழாகும்; லட்சியம் நிறைவேறாது.

எனவே, மாணவர்களை டூவீலர்களில் பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர், கட்டாயம் 'ெஹல்மெட்' அணிந்து வர வேண்டும்; இதுகுறித்து விழிப்புணர்வை, மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோரிடம் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

அதன்பின், மாணவ, மாணவியர் உறுதிமொழியேற்றுக் கொண்டனர். போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான ஓவியம் வரைந்த மாணவிகள் பிரனிதா, பிரியதர்ஷினி மற்றும், அங்குள்ள நுாலகத்துக்கு பிரதி ஞாயிறு தோறும் தவறாமல் சென்று புத்தகம்வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள,2ம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

Advertisement