சமூக, நிதி அதிகாரம் அளிக்கும் முயற்சிகளில் சுய உதவிக் குழுக்களின் பங்கு உள்ளது மத்திய நிதித்துறை அமைச்சக செயலாளர் பேச்சு

மதுரை: ''சமூக மற்றும் நிதி அதிகாரம் அளிக்கும் முயற்சிகளில் சுய உதவிக் குழுக்களின் பங்கு உள்ளது'' என

மதுரையில் இந்தியன் வங்கி சார்பில் நடந்த சுய உதவி குழுவினருக்கான மெகா கடன் வழங்கும் முகாமில் மத்திய நிதித்துறை அமைச்சக செயலாளர் நாகராஜூ பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது:

மத்திய அரசு சுய குழுவினருக்காக ரூ.10 லட்சம் வரை வங்கி கடனுக்கு உத்திரவாதம் தருகிறது. பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும். மகளிர் சுய உதவி குழுவினர் கிராமப்புற வளர்ச்சியை வளர்த்து இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சமூக மற்றும் நிதி அதிகாரம் அளிக்கும் முயற்சிகளில் பங்கு வகிக்கின்றனர்.

இது நாடு தழுவிய இயக்கமாக வளர்ந்து 17.8 கோடி குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1.4 கோடி சுய உதவி குழுக்கள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 77.4 லட்சம் சுய உதவி குழுக்கள் கடன் வசதியை பெற்றுள்ளன. இந்த குழுக்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமானவை தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ளன. இது இந்த திட்டத்தின் வெற்றியாகும்.

இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 91 லட்சம் சுய உதவி குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சுய உதவி குழுக்களுக்கு ரூ.9.85 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக்கடன் கிடைத்துள்ளது. பெண்கள் தொழில் துவங்க ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு 7 சதவீத வட்டியிலும், ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 9 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படுகிறது.

இது தொழில் முனையும் பெண்கள் மீதான சுமையை குறைக்கிறது. சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை மத்திய அரசு சந்தைப்படுத்தும் வகையில் 'ஜெம்' இணையதள போர்ட்டல் அமைத்துள்ளது. முக்கிய மின் வணிக நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த மாநில அரசு மதி என்ற பிராண்ட் பெயரை பயன்படுத்துகிறது. இதற்காக மதி சந்தை டாட் காம் என்ற மின் வணிக தளம் உள்ளது என்றார்.

இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் பினோத்குமார் பேசுகையில் ''இந்தியாவில் முதன்முறையாக மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்குவதற்காக 'மைக்ரோசாட்' என்ற கிளை இந்தியன் வங்கி சார்பில் தொடங்கப்பட்டது. 57 கிளைகள் தற்போது உள்ளன.

இதன் மூலம் 20 ஆயிரம் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பயன் பெற்றுள்ளனர்'' என்றார்.

Advertisement