செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி

4


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சிகோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே சத்ரபதி சிவாஜி அடித்தளமிட்டுள்ளார்.


இந்தியாவில், மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக அமைந்திருந்த 12 கோட்டைகளை, உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மஹாராஷ்டிரா அரசு முன்னெடுத்தது. அதில் 11 கோட்டைகள் மஹாராஷ்ட்டிராவில் உள்ளன. 12வது கோட்டையாக, தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டை அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜெகாம்ஸ், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் செஞ்சி கோட்டையில் நேரடி ஆய்வில் ஈடுபட்டார்.


இவரது அறிக்கையை தொடர்ந்து செஞ்சி கோட்டை உள்ளிட்ட 12 கோட்டைகளையும், தனது பட்டியலில் இணைத்து, அறிவிப்பு ஒன்றை, நேற்று முன்தினம் வெளியிட்டது யுனெஸ்கோ நிறுவனம். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த உலக பாரம்பரிய குழுவின் 47வது அமர்வில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த யுனெஸ்கோ அறிவிப்பின் பின்னணியில், 348 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு இருக்கிறது என்று, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அமைந்துள்ள பழம் பெரும் கோட்டை, கி.பி.13ம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில், ஆட்சியாளர்கள் பலரால் மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. கடந்த கால வரலாற்றில், தென்னிந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகளில் ஒன்றாக திகழ்கிறது. குறிப்பாக, பீஜப்பூர் சுல்தான்களிடம் இருந்து 1677ல் செஞ்சி கோட்டையை கைப்பற்றினார் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி.


சுமார் 20 ஆண்டுகள் இவர்களது ஆளுகையின் கீழ் இருந்தது செஞ்சி கோட்டை. அந்த நேரத்தில்தான், கிழக்கிந்திய கம்பெனியினர் தேவனாம்பட்டினத்தில் வணிகம் செய்வதற்கான உரிமை செஞ்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. செஞ்சி கோட்டையை கைப்பற்றிய சில காலம் பேரரசர் சிவாஜி அங்கு தங்கியிருந்தார். அப்போது, கோட்டை அரண்களை பலப்படுத்துவதில் பெரிதும் கவனம் செலுத்தினார். சுற்றுச்சுவர் மதில்கள் பலப்படுத்தப்பட்டன. காவல் அரண்கள் ஏற்படுத்தப்பட்டன.


சிவாஜி கைப்பற்றிய சில நாட்களில், செஞ்சிக்கு வந்திருந்த பிரான்சிஸ் மார்ட்டின், அதனை பதிவு செய்து இருக்கிறார். இவரைத்தொடர்ந்து கி.பி., 1678ல் செஞ்சிக்கு வந்திருந்த ஜெசூட் பாதிரியார் ஆன்ட்ரூ பிரைரா என்பவர், 'இந்தப் பணியில், சிவாஜி தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி, முக்கிய நகரங்களைப் பலப்படுத்த தனது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தியுள்ளார்.


அவர், செஞ்சியைச் சுற்றி புதிய அரண்களைக் கட்டினார், அகழிகளைத் தோண்டினார், கோபுரங்களை உயர்த்தினார், நீர்த்தேக்கங்களை அமைத்தார், ஐரோப்பிய பொறியாளர்களே வியக்கும் வகையில், கச்சிதமாக அனைத்து வேலைகளையும் செய்தார்' என்று விரிவாக தகவலை பதிவு செய்து இருக்கிறார். சத்ரபதி சிவாஜியின் இந்த பணிகள், மராத்திய அரசுக்கு பெரிதும் கைகொடுத்தன.


இதன் காரணமாகவே இவர்களிடமிருந்து, செஞ்சியை கைப்பற்ற மொகலாயர்கள் 7 ஆண்டுகள் முற்றுகையில் ஈடுபட வேண்டியிருந்தது. சிவாஜியின் ஆளுகையின் கீழ் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக செஞ்சிக் கோட்டை மாற்றப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக்கோட்டை தற்போது இடம்பெற்றுள்ளது.


இதன் மூலம் உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை செஞ்சி கோட்டை பெரிதும் ஈர்க்கும். சுற்றுலா, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வளர்ச்சி காணும் வாய்ப்பு செஞ்சிக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

Advertisement